சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் பசுமை விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கான வாய்ப்பு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்று சட்டசபையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கையை இன்று சட்டசபையில் தாக்கல் செய்த அமைச்சர் கே.என்.நேரு, கொள்கை விளக்க குறிப்பில் கூறியதாவது: சென்னையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப் பட்டுள்ளதால் சென்னை விமான நிலையத்தை நவீன படுத்தவும், விரிவுபடுத்தவும் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தேவையான 1,069.99 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணி அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையம் நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ரூ.1,800 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் 2010 ஆம் ஆண்டில் முடியுமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய பசுமை விமான நிலையம் ஒன்றை ஸ்ரீபெரும்புதூரில் அமைப்பதற்கான வாய்ப்பு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சமர்ப்பித்துள்ள பெருந்திட்டத்தின் கீழ், அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தேவையை கையாள்வதற்கு கோவை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீன மயமாக்கும் திட்டத்திற்கு தேவையான நிலங்களை வழங்குவதற்காக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
0 comments:
Post a Comment