Saturday, April 12, 2008

இட ஒதுக்கீடு தீர்ப்பு: எய்ம்ஸ் டாக்டர்கள் எதிர்ப்பு.

உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு புதுடெல்லியில் எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து புதுடெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவர்கள் சங்கத் தலைவர் குமார் ஹர்ஷ் கருத்து தெரிவிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிர்வரும் சந்ததியினருக்கும் பெரும் இன்னல்களை விளைவிக்கும் என்று குறிப்பிட்ட அவர், இதன்மூலம் உயர்கல்வி மிகவும் பலவீனமடையும் என்றார். ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளித்து மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தபோது முதலில் எதிர்ப்பு தெரிவித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் தான் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Free Blog CounterLG