Sunday, April 20, 2008

ஆன்லைன் வர்த்தகம்: மா. கம்யூ எதிர்ப்பு

ஆன்லைன் வர்த்தகம் காரணமாக நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகிறது என்றும், எனவே ஆன்லைன் வர்த்தகத்திற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கூறியிருக்கிறார்.

மதுரையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலைவாசி உயர்வை எதிர்த்து போராடும் அதேவேளையில், வகுப்புவாத சக்திகள் ஆட்சிக்கு வராமல் தடுக்கவும் போராடும் என்றார்.

தொழிலாளர்நல வாரியங்களின் குறிப்பிட்ட சில பணிகளை வருவாய்த் துறைக்கு மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்றும் வரதராஜன் கூறினார்

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்




மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை வெகுச்சிறப்பாக நடைபெற்றது.

தங்கக் குதிரை வாகனத்தில் லட்சக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்திற்கு நடுவே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

இதற்காக நேற்றிரவு முதலே மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டது. அழகர் கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு வழிநெடுக பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளை நடத்தினார்கள்.

பச்சைப் பட்டாடை உடுத்தி வந்த கள்ளழகர், காலை 7.30 மணியளவில் வைகை ஆற்றில் இறங்கினார். கூடியிருந்த பக்தர்கள் அழகரை தரிசித்து பரவசம் அடைந்தனர்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதைக் காண பக்தர்கள் மதுரைக்குச் செல்ல ஏதுவாக முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

முன்னதாக நேற்று மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் தேரோட்டம் நடைபெற்றது.

யூக வணிகத்திற்கு தடை விதிக்கப்படும்-கமல்நாத் சூசகம்




நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு தராதபட்சத்தில், விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைப்பதற்காக யூக வணிகத்திற்கு தடை விதிக்க அரசு தயங்காது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் கமல்நாத் கூறியிருக்கிறார்.

மேலும் ஸ்டீல் வர்த்தகத்தை எஸ்மா சட்டத்தின் கீழ் கொண்டுவருவது பற்றியும் அரசு முடிவெடுக்கும் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பதுக்கல் உள்ளிட்ட மோசடி வணிகத்தை தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால், மத்திய அரசின் முயற்சிகள் அர்த்தமற்றதாகி விடும் என்று கமல்நாத் குறிப்பிட்டார்.

விலை உயர்வைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாகவும் அவர் கூறினார்.

பணவீக்கம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்தும், அரசியல் கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநில அரசுகளை தாம் இவ்வாறு கேட்டுக் கொள்வதாக கமல்நாத் குறிப்பிட்டார்.

பணவீக்க உயர்வு, விலைவாசி உயர்வு தொடர்பாக முதல் அமைச்சர்களின் கூட்டத்தை நிதியமைச்சர் ப. சிதம்பரமும், பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கம் என்று கூறிய அவர், அதற்காக யூக வணிகத்தையும் தடை செய்ய நேரிடலாம் என்றார்.

ஸ்டீல் விலையைப் பொறுத்தவரை கடந்த ஒரு ஆண்டில் சுமார் 49 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

என்றாலும் ஸ்டீல் வர்த்தகத்தை எஸ்மா சட்டத்தின் கீழ் கொண்டுவரும் திட்டம் உடனடியாக இல்லை என்றும், மாநில அரசுகள் ஸ்டீல் விலையைக் கட்டுப்படுத்தத் தவறினால், கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் எச்சரித்தார்

புதின் கிசுகிசு வெளியிட்ட இரஷ்ய பத்திரிக்கை மூடப்பட்டது

இரஷ்ய அதிபர் புதின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை மணக்க இருப்பதாக வெளியான செய்தியை மறுத்ததை அடுத்து அலெக்ஸான்டர் என்கிற தொழிலதிபருக்குச் சொந்தமான Moskovski Korrespondent பத்திரிக்கையை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்திருக்கிறார். அதற்கான காரணம் தொழில் சம்பந்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செய்தியை பிரசுரித்த ஆசிரியர் கட்டாய ராஜினாமா கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Paper is shut down after report on Vladimir Putin’s love life



காவல் நிலையத்தில் பெண் கற்பழிப்பு

ஆந்திராவில் உள்ள கர்னூல் உட்பட்ட காவல் நிலையத்தில் திருட்டு குற்றத்திற்காக அழைத்துச்செல்லப்பட்ட பெண் ஒருவர் நான்கு நாட்கள் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற கிராம மக்கள் காவல் நிலையம் மீது கல்எறிந்து கலவரத்தில் ஈடுபட்டனர். தண்ணீர் பீய்ச்சி அவர்களை விரட்டியடித்தது காவல் துறை.

பெண் ஒருவர் நான்கு நாட்கள் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளார்

கடந்த திங்கள் கிழமை அழைத்துச்செல்லப்பட்ட அவருக்கு வயது 31, நேற்று சனிக்கிழமை அவரை சந்திக்கச்சென்றவர்கள் தன்னை சப் இன்ஸ்பெக்டர் அரோஹனா ராவ் மானபங்கம் செய்துவிட்டார் என்றதை அடுத்து கிராம்மக்கள் வெகுண்டெழுந்தனர்.

சப்இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெண் காவல்துறை இல்லாத காவல் நிலையத்தில் பெண் ஒருவர் இரவில் தங்கவைக்ககூடாது எனகிறது சட்டம். அதிலும் குற்றம் சுமத்தப்பட்டவர் ஒருநாளைக்கும்மேல் காவல் நிலையத்தில் தங்க வைக்க கூடாது என்கிறது குற்றவியல் சட்டம்.


துபையில் தொழிலாளர்களுக்கான தொண்டு நிறுவனம்

துபாயில் அடிப்படை தொழிலாளர்களின் பிரச்சனை தீர்க்கும் அரசுத்துறை தொண்டு நிறுவனம் துவக்கம்

அமீரக நாடுகளில் ஒன்றான துபாயில், பல நாடுகளை சார்ந்த பல அடிப்படை தொழிலாளர்கள் சோனாப்பூர் என்ற பகுதியிலும் மற்றும் அல்கூஸ், ஜெபல் அலி போன்ற பகுதியிலும் வசிக்கிறார்கள். இவர்கள் அதிகப்படியாக கட்டுப்பானப்பணி புரிவதிலும், சாலை ஓரப்பணி புரிவதிலும், மற்றும் பல கடினமான பணிகளிலும் ஈடுப்படுகிறார்கள். இவர்களை பணிக்கு எடுக்கும் நிறுவனங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் உள்ள நிறுவனங்கள் தான் (Contracting Companies). இந்த நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யும் போது குறைந்த சம்பளத்தினை தொழிலாளர்களுக்கு தருகிறார்கள். சம்பளம் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரங்கள் அல்லது 14 மணி நேரங்கள் பணிபுரிகிறார்கள் இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் ஊதியமோ மிக மிக குறைவாக இருக்கிறது. வெள்ளிக்கிழமை மற்றும் விடுமுறைக்காலங்களிலும் வேலை செய்தாலும் ஒரு சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு குறைந்த கூலியினை தருகிறது. அத்துடன் தொழிலாளர்கள் தங்கக்கூடிய இடங்களும் அடிப்படை வசதி இல்லாத அளவிற்கும் மாறிக்கொண்டு வருகிறது. ஒரு சில நிறுவனங்கள் செய்யும் இத்தகைய தவறுகளால் பல பிரச்சனைகளை இங்குள்ள தொழிலாளர்கள் தினம் தினம் சந்திக்க வேண்டி இருக்கிறது. சென்ற சில மாதங்களாக துபாய், அஜ்மான், ஷார்ஜா போன்ற பகுதியில் உள்ள தொழிலாளர்கள் அடிப்படை வசதி இல்லை, ஆறு மாத சம்பள பாக்கி, அறைகளில் மின்சாரம் இல்லை, தங்கி இருக்கும் பகுதிகளில் சரியான தண்ணீர் வசதி இல்லை மற்றும் இன்னும் பல காரணங்களை காட்டி சாலைகளில் இறங்கி போராட்டங்களை செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பல தொழிலாளர்களை அவர்களின் தாய் நாட்டிற்கு திரும்ப அனுப்பி விட்டது துபாய் அரசாங்கம்.

அடிப்படை தொழிலாளர்கள் இல்லை என்றால், துபாயில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடங்கி விடும் என்பதினை கருத்தில் கொண்ட துபாய் அரசாங்கமானது, தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டி சோனாப்பூர் பேருந்து நிலைய பகுதியில் நிரந்தரமாக தொழிலாளர்கள் குறை தீர்க்கும் தொண்டு நிறுவனம் ஒன்றினை (Permanent Committee for Labour Affairs (PCLA) 18.4.08 வெள்ளிக்கிழமை மாலை அன்று பல தொழிலாளர்கள் முன்னிலையில் துவங்கியது. இந்நிகழ;ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மேஜர் ஜெனரல் முஹம்மது அஹமது அல் மாரி அவர்கள் (Major - General Mohammed Ahmed Al Marri - Director of the Dubai Naturalisation and Residency Department and Chairman of PCLA) அவர்கள் கூறுகையில், தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பிரச்சனை எற்பட்டாலும் எங்களிடம் முறையிடலாம், வேலை நேரம் அதிகம் நிறுவனங்கள் தருகிறது, சம்பள பாக்கி, அடிப்படை வசதி குறைவு இது போல் என்ன பிரச்சனை இருந்தாலும் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து அந்தந்த துறைச்சார்ந்தவர்களிடம் (Relevant Department) கூறுவோம். ஒரு மணி நேரத்துக்குள் தொழிலாளர்களின் பிரச்சனை சரிப்படுத்த எங்களின் இந்த நிறுவனமானது முயற்சியினை மேற்கொள்ளும். தொழிலாளர்களின் வசதியினை கருத்தில் கொண்டு மாலை நேரத்திலும் எங்கள் தொண்டு நிறுவனம் பணி செய்யும். அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் எப்படி செயல்படுகிறது, எப்படி அந்த நிறுவன அதிகாரிகளை சந்தித்து குறை சொல்வது போன்றவைகளை பற்றியும், கல்வியின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை அடிப்படை தொழிலாளர்களுக்கு கற்றும் தரும் பணியிலும் இந்த நிறுவனமானது செயல்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். தற்போது சோனாப்பூரில் துவங்கி இருக்கிறோம் அதன் பின் ஜெபல் அலி, அல் கூஸ் போன்ற பகுதியிலும் மிக விரைவில் துவங்க உள்ளோம் என்றும் சொன்னார்.

இந்த துவக்க நிகழ்ச்சியில் இலங்கை, எகிப்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை சார்ந்த அரசுத்துறை (Government Diplomats) அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். பாகிஸ்தான் தூதரகத்தினை சார்ந்த முஹம்மது வாஷின் (Mohammed Waseen – Welfare Consul at the Pakistani consulate in Dubai) அவர்கள் குறிப்பிடுகையில், இந்த நிறுவனமானது தொழிலாளர்களின் அடிப்படை வசதிக்காகவும், மற்றும் மகிழ்வுடன் தொழிலாளர்கள் துபாயில் இருப்பதற்கான அனைத்து வசதி வாய்ப்பினை தரும் என்றும் கூறினார்.


தலிபான்களால் தான் கடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தூதர் கூறுகிறார்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதர் வீடியோ ஒன்றில் காண்பிக்கப்பட்டுள்ளார். அதில் அவர் தான் தலிபான்களால் கடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அல் அரேபியா தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட வீடியோவில் தூதர் தாரிக் அசிசூதினை சுற்றிலும் ஆயுததாரிகள் நிற்கின்றனர்.

தன்னை அவர்கள் நல்லப்படியாக கவனிக்கின்றார்கள் என்றும், இருந்தாலும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் மார்புவலியால் தான் அவதிப்படுவதாக அவர் கூறினார்.

அந்த வீடியோவில் தலிபான்களின் கோரிக்கைகளை ஏற்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்தை தூதர் கோருகின்றார்.

தங்களுக்கு எவ்வித கோரிக்கையும் வரவில்லை என தெரிவித்துள்ள இஸ்லாமாபாதில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், தூதரை பாதுகாப்பாக மீட்க தேவையான அனைத்தும் செய்யப்பட்டு வருவதாக கூறுகிறது.

Free Blog CounterLG