Thursday, May 15, 2008

'மன்னிச்சுக்க செல்லமே' - ஒபாமா

அமெரிக்க ஜனநாயக கட்சியின் வேட்பாளர் தேர்வில் ஹிலாரி கிளின்டனும் ஒபாமாவும் அக்கட்சியின் வேட்பாளர் தேர்விற்கு போட்டியில் உள்ளனர்.



டெடராய்டில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றில் அகார் என்கிற பெண்மணி வாகனத் தொழிலாளர்கள் தொடர்பாக கேள்வியொன்றை எழுப்பினார். அவரை இடைமறித்த ஒபாமா 'நிறுத்து செல்லமே, நாங்கள் செய்வோம், பத்திரிக்கைகளுக்கு பிறகு செய்தி தருவோம்' என்று தெரிவித்திருந்தார்.

செல்லமே என்கிற வார்த்தையை பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டு அப்பெண்மணியின் கைப்பேசிக்கு இரண்டு ஒலி மின்னஞ்சல்களை (voice mails) அனுப்பியுள்ளார். அதில் ஒன்று அவருக்கு பதில் அளிக்காததற்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.

அடுத்ததில் 'செல்லமே என்கிற வார்த்தை தன்னிடம் ஒட்டிக்கொண்டுள்ள தீய செயல் என்றும் கூறியுள்ளார். தான் எல்லோரிடத்திலும் அத்தகைய சொல்லை பயன்படுத்துவதாகவும் டெடராய்டிற்கு பிறிதொரு சமயம் வரும்போது பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தங்களை சந்திப்பேன், தன்னுடைய கைப்பேசிக்குத் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்' என்று கூறியுள்ளார்.

ஜிம்பாப்வேயின் 500 மில்லியன் டொலர் நோட்டு


உணவகத்தில் சாப்பிடுவதற்காக பணத்தை கட்டு கட்டாக எடுத்துச்செல்கிறார் அந்நாட்டு குடிமகன் ஒருவர்
ஆப்ரிக்கா கண்டத்தின் ஒரு நாடான ஜிம்பாப்வே கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நாட்டின் பணவீக்கம் கடந்த பிப்ரவரியில் 165000 சதவீதம் அதிகரித்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியை அந்நாடு சந்தித்து வருகிறது. விலைவாசியும் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது.

இதன் காரணமாக பணத்தின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அதனை சமாளிக்க கடந்த ஜனவரியில் 10 மில்லியன் ஜிம்பாப்வே டொலரை அந்நாடு அறிமுகப்படுத்தியது. கடந்த ஏப்ரலில் 50 மில்லியன் டொலரும் மே 10 அன்று 100 மில்லியன் மற்றும் 250 மில்லியன் டாலர்களை அந்நாடு அறிமுகப்படுத்தியது.

இன்று அந்நாட்டின் ரிசர்வ் வங்கி 500 மில்லியன் ஜிம்பாப்வே டொலரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதற்கான அறிவிப்பு அந்நாட்டின் பத்திரிக்கைகளில் வந்துள்ளது.

1980 ஆண்டு சுதந்திரம் அடைந்தப் பிறகு அந்நாட்டின் ஒரு ஜிம்பாப்வே டொலர் ஒரு அமெரிக்க டொலருக்கு நிகராக இருந்தது. தற்போது உணவு மற்றும் எண்ணெய் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.

ஜிம்பாப்வேயின் ஒரு 500 மில்லியன் டொலர் இரண்டு அமெரிக்க டொலருக்கு ஒப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தசாவதாரம் பிரச்சினை

கே.எஸ்.ரவிக்குமார் விளக்கம்
தசாவதாரம் படத்தின் சில காட்சிகளை நீக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் சர்வதேச ஸ்ரீ வைஷ்ணவ தர்ம சம்ரக்ஷணா என்ற அமைப்பின் தலைவர் கோவிந்த ராமானுஜ தாசா என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு பதில் மனு அளித்த படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பின்வருமாறு அந்த மனுவில் கூறியிருப்பதாவது-
படத்தின் மொத்த கதையின் பின்னணி தெரியாமல் டிரெய்லரில் வரும் ஒன்றிரண்டு காட்சிகளை பார்த்துவிட்டு மனுதாரர் இவ்வாறு கூறுகிறார். சைவ வைணவர்களுக்கு இடையே மோதல் வருவதாக எந்த காட்சியும் இதில் இல்லை. சிலையோடு ராமானுஜரை சேர்த்து கட்டுவதாக கூறுவது தவறு. கடலில் விடுவதற்கு முன்பாக சிலையோடு கதாநாயகனை சேர்த்து கட்டுவது என்பது படத்திற்காக சேர்க்கப்பட்ட கற்பனைதான்.

வைணவர்கள் உள்ளிட்ட எவரையும் புண்படுத்தும் விதத்தில் படத்தில் எந்த காட்சியும் இல்லை. தீவிர வைணவ பாத்திரத்தில் கமல் நடித்துள்ளார். கடவுள் விஷ்ணுவுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்கிறார்.

ஓம் மந்திரத்தின் மீதோ, பகவத் கீதை மீதோ யாரும் கால் வைப்பது போல் காட்சி இல்லை. ராமானுஜர் பாத்திரத்தில் கமல் நடிக்கவில்லை. வன்முறையை சித்தரிக்கும் விதத்தில் காட்சிகளும் இல்லை. படத்தின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. தசாவதாரம் பெயரை கேலி செய்யும் விதத்தில் படம் இல்லை.

நானும் விஷ்ணுவின் தீவிர பக்தன்தான். மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் நான் செயல்பட மாட்டேன். எனவே காட்சிகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே சென்சார் போர்டு இதை பரிசீலித்து சான்றிதழ் வழங்கிவிட்டது.
இவ்வாறு கே.எஸ்.ரவிக்குமாரின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.சென்சார் போர்டின் மண்டல அதிகாரி பாபு ராமசாமி தாக்கல் செய்த பதில் மனுவில், படத்தின் பெயர் சினிமா பட சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை மீறியதாக இல்லை. எனவே பெயருக்கு ஆட்சேபணை தெரிவிக்க வேண்டிய காரணம் இல்லை.

நவராத்திரி என்கிற படத்தில் நடிகர் சிவாஜி நடித்தார். மக்கள் இதை தவறாக பார்க்கவில்லை. அவதாரம், கல்கி ஆகிய படங்களின் பெயர்களுக்கும் சான்றிதழ் அளித்துள்ளோம். 30 ஆண்டுகளுக்கு முன்பாக தசாவதாரம் என்கிற பெயருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஓம் மந்திரத்தின் மீதோ, பகவத் கீதையின் மீதோ கால் வைப்பதாக எந்த காட்சியும் இல்லை. ராமானுஜரின் சீடரான ரங்கராஜன் நம்பி என்கிற பாத்திரத்தில் கமல் நடிக்கிறார். தனது குருபக்தி காரணமாக அவர் தியாகம் செய்கிறார்.

சிதம்பரம் கோவிலில் இருந்து கோவிந்தராஜ சிலையை அகற்ற முற்படும்போது வீரர்களுடன் ரங்கராஜன் நம்பி சண்டை போடுகிறார். இன்னும் படம் வெளியிடப்படவில்லை.

படத்தை பார்ப்பதற்கு முன்பாகவே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த காட்சிகளின் தாக்கம் என்ன என்பதை படம் பார்த்த பிறகே ஆராய முடியும். யூகத்தின் அடிப்படையிலேயே இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Free Blog CounterLG