Monday, April 21, 2008

கட்டுமானப் பொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவோம் - ப.சிதம்பரம்

கோபி, ஏப். 22- கட்டுமானப் பொருள்களான இரும்பு, சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் ஆலை அதிபர்களின் ஏகபோகம்தான். அரசின் முழு சக்தியையும் பயன்படுத்தி இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்துவோம் என்றார் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் கோபியில் நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.என்.நல்லசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சிதம்பரம் மேலும் பேசியதாவது: பொருளாதாரத்தில் இந்தியா வளர்ந்து இருந்தாலும் உணவு உற்பத்தியில் இன்னும் தன்னிறைவைப் பெறவில்லை. இந்தியாவில் பருப்பு, சமையல் எண்ணெய், விவசாயத்துக்கு தேவைப்படும் உரம், கச்சா எண்ணெய் ஆகியவை நம்முடைய தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படாத காரணத்தினால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இந்த பொருள்களின் விலையை அந்தந்த நாடுகள்தான் நிர்ணயம் செய்கின்றன. அந்த விலையை கொடுத்து நாம் வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

கச்சா எண்ணெய் 75 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய், பாமாயில், யூரியா, கோதுமை உள்ளிட்ட பொருள்களின் விலை 2004-ல் இருந்ததைவிட பன்மடங்கு தற்போது உயர்ந்துள்ளது. பருத்தி ஏற்றுமதியைத் தடை செய்ய சிலர் கூறுகின்றனர், ஆனால், ஏற்றுமதி செய்தால்தான் இறக்குமதி செய்ய முடியும். 2002-ல் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.550 வழங்கப்பட்டது. தற்போது ரூ.775 வழங்கப்படுகிறது. நெல்லுக்கு விலை கூடினால் அரிசி விலை உயரும், கரும்புக்கு விலை கூடினால் சர்க்கரை விலை கூடும். விவசாயப் விளை பொருள்களுக்கு விலையைக் கூட்டினால் நுகர்வோருக்கு விலை உயரும். பொருள்களை இறக்குமதி செய்யும் போது பணவீக்கத்தையும் இறக்குமதி செய்கிறோம். இந்தியா வளர்ந்து வரும் நாடு. இதனால் நாட்டின் நுகரும் அளவும் அதிகரிக்கிறது. உள்நாட்டு சந்தையில் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு கட்டாயமாக நடவடிக்கை எடுக்கும். விலைவாசியை முதலில் மட்டுப்படுத்த முயற்சி செய்து பின்னர் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

0 comments:

Free Blog CounterLG