Monday, April 21, 2008

அதிமுக பேரவையில் இருந்து வெளிநடப்பு



உடுமலைப்பேட்டையில் நடந்து வரும் திமுக உட்கட்சி தேர்தல் ஏற்பாடுகளின் போது ஏற்பட்ட கலவர சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், சட்டபேரவையில் இருந்து அதிமுகவினர் இன்று வெளிநடப்பு செய்தனர்.

இன்றைய சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது, உடுமலைப்பேட்டையில் உட்கட்சி தேர்தல் தொடர்பாக திமுகவினர் இடையே நடந்த மோதலில், காவல்துறை டிஎஸ்பி ஈஸ்வரன் மீது நடந்த தாக்குதல் குறித்து விவாதிக்க அனுமதியளிக்குமாறு எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் ஆவுடையப்பனிடம் அனுமதி கோரினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிதியமைச்சர் க.அன்பழகன், கட்சி தொடர்பான பிரச்சனைகளை விவாதிக்க அவையில் அனுமதி தரக்கூடாது என்றார்.

இதை ஆமோதிக்கும் வகையில், கட்சி தொடர்பான பிரச்சனைகளை சட்டப் பேரவையில் விவாதிக்க அனுமதியளிக்க முடியாது என சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

இதையடுத்து அதிமுக கொறாடா செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததுடன், அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments:

Free Blog CounterLG