Thursday, April 17, 2008

ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து, பள்ளிக் குழந்தைகள் உட்பட 44 பேர் பலி!




வதோதரா, ஏப்.17- குஜராத் மாநிலம் வதோதரா அருகில் நர்மதை ஆற்றுக்குள் அரசு பஸ் கவிழ்ந்தது. பஸ்சில் பயணம் செய்த 41 பள்ளிக் குழந்தைகள் உட்பட 44 பேர் பலியாகினர்.

60 அடி ஆழம்
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள தார்கோல் என்ற இடத்தில் இருந்து நேற்று காலையில் ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஏராளமான குழந்தைகளும் பயணம் செய்தனர். அனைவரும் தேர்வு எழுதுவதற்காக சென்று கொண்டு இருந்தனர். பொடேலி அருகே காலை 6.30 மணி அளவில் அந்த பஸ் வந்தது.

பொடேலி கிராமம் வழியாகத்தான், நர்மதை ஆற்றில் இருந்து சர்தார் சரோவர் அணைக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. அந்த ஆற்றின் பாலம் மீது பஸ் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 60 அடி ஆழத்துக்கு கீழே ஓடிக்கொண்டு இருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்தது. அதனால் பஸ்சுக்குள் இருந்த பள்ளிக் குழந்தைகள் உட்பட அனைத்து பயணிகளும் தண்ணீருக்குள் மூழ்கினர்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் வதோதரா மாவட்ட கலெக்டர் விஜய் நெஹ்ரா, போலீஸ் சூப்பிரண்டு விஸ்வகர்மா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. மீட்பு பணிகள் வசதிக்காக சர்தார் சரோவர் அணைக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டது.



ஆற்றுக்குள் மூழ்கி மூச்சுத் திணறி இறந்த 44 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களில் 41 பேர் பள்ளிக் குழந்தைகள். டிரைவர், கண்டக்டர் இருவரும் பலியாகி விட்டனர். இது தவிர, 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். ஆற்றுக்குள் மூழ்கி கிடந்த பஸ், கிரேன் மூலமாக வெளியே எடுக்கப்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல் மந்திரி நரேந்திர மோடி, பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நஷ்ட ஈடு அளிக்க உத்தரவிட்டார்.

இந்த விபத்து குறித்து விசாரிக்க 5 உறுப்பினர்களை கொண்ட உயர்மட்ட கமிட்டியும் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கமிட்டியில் இரண்டு அரசு செயலாளர்கள் மற்றும் ஒரு உயர் போலீஸ் அதிகாரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விபத்து குறித்த அனைத்து தகவல் களையும் இந்த கமிட்டியினர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

லோக்சபா அஞ்சலி
இதற்கிடையே, பள்ளி குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமான பொடேலி பள்ளியில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளி குழந்தைகள் பயணம் செய்த அரசு பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்த சம்பவம், குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிக் குழந்தைகள் பலியான சம்பவம், பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. நேற்று பாராளுமன்றம் கூடியதும், `குஜராத்தில் நர்மதை ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்ததால் பலியான பள்ளி குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், அவர்களுடைய குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி தெரிவித்தார்.

0 comments:

Free Blog CounterLG