Saturday, April 19, 2008

உண்ணாவிரதத்தில் பங்கேற்காதது ஏன்?,நூற்றுக் கணக்கில் கடிதங்கள் வந்து குவிந்தன.

உடம்பு சரியில்லை-வழுக்கி விழுந்துவிட்டேன், என்று விளக்கம்
சென்னை, ஏப்.19- தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ளாதது ஏன்? என்று விளக்கம் அளித்து பல நடிகைகள், நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

அதில் பெரும்பாலானவர்கள், ``உடம்பு சரியில்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஒரு நடிகை, பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டதாக எழுதியிருக்கிறார்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் தமிழ் அமைப்புகள் மீதும், தியேட்டர்கள் மீதும் கன்னட வெறியர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள். இதை கண்டித்து, தமிழ் திரையுலகம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில், ரஜினிகாந்த்-கமலஹாசன் உள்பட ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்துகொண்டார்கள். முன்னணி கதாநாயகிகள் மற்றும் நடிகர்-நடிகைகள் பலர் உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை.

உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளாதது ஏன்? என்று விளக்கம் கேட்டு, அந்த நடிகர்-நடிகைகளுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டன.

அதற்கு விளக்கம் அளித்து, நூற்றுக் கணக்கான நடிகர்-நடிகைகள், நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

அவர்களில், நடிகர்கள் கார்த்திக், மணிவண்ணன், நடிகைகள் ரேவதி, சிம்ரன், நிலா, பத்மப்ரியா, ரீமாசென் ஆகியோர், ``உடம்பு சரியில்லாததால், உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள முடியவில்லை'' என்று விளக்கம் எழுதியிருக்கிறார்கள்.

`அழகி' படத்தின் மூலம் பிரபலமான நடிகை மோனிகா, ``பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டதால், உண்ணாவிரதத்துக்கு வர முடியவில்லை'' என்று எழுதியிருக்கிறார்.

நடிகை நவ்யா நாயரும், நடிகர் ரகுமானும், ``வெளிநாட்டில் இருந்ததால் வரமுடியவில்லை'' என்று விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.

நடிகர் நெப்போலியன், வெளிநாட்டில் இருப்பதால் கலந்துகொள்ள இயலாது என்று முன்கூட்டியே கடிதம் அனுப்பி விட்டார். இதேபோல் நடிகை ராதிகா சரத்குமாரும் வெளிநாட்டில் இருப்பதால் வர முடியவில்லை என்று முன்கூட்டியே கடிதம் அனுப்பி இருக்கிறார்.

முன்னணி கதாநாயகிகளான அசின், கோபிகா ஆகிய இருவரிடம் இருந்தும் இன்னும் கடிதங்கள் வரவில்லை என்றும், விளக்க கடிதத்துக்கான `கெடு' முடிவடைய இன்னும் 7 நாட்கள் இருக்கிறது என்றும் நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

(நன்றி-தினத்தந்தி)

0 comments:

Free Blog CounterLG