Saturday, April 19, 2008

சென்னையில் நள்ளிரவில் ரவுடிகள் வேட்டை; 50 பேர் சிக்கினர்

சென்னை, ஏப். 18- சில மாதங்களுக்கு முன் அரும்பாக்கத்தில் பதுங்கி இருந்த மதுரையைச் சேர்ந்த கூலிப்படை கும்பல் சிக்கியது. போலீசார் அவர்களது சதிதிட்டத்தை முறியடித்தனர்.

கடந்த வாரம் அயனாவரத்தில் பதுங்கி இருந்த ரவுடிகள் செந்தில்குமார், சுடலை மணி ஆகியோர் போலீசாருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் சென்னையில் பதுங்கி இருந்து கொண்டு தூத்துக்குடியை மிரட்டிய தாதாக்கள் ஆவார்கள்.

இதற்கிடையே சென்னையின் வரலாற்று சிறப்புமிக்க கபாலீசுவரர் கோவிலில் நடந்த கொள்ளையை தொடர்ந்து போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நாளையும், நாளை மறுநாளும் சித்ரா பவுர்ணமி விழாக்களும், சித்திரை திருவிழா என தொடர்ந்து பண்டிகை விடுமுறை வருவதால் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக சென்னையில் உள்ள அனைத்து போலீசாரும் கூட்டாக சேர்ந்து `ஷாமிங் ஆபரேஷன்' என்ற பெயரில் நள்ளிரவில் சோதனை நடத்துகிறார்கள். போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் தலைமையில் இணை கமிஷனர்கள் ரவி, பால சுப்பிரமணியம், துரை ராஜ் ஆகியோர் மேற்பார் வையில் அனைத்து துறை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 ஆயிரம் பேர் இந்த சோதனையில் ஈடுபட் டனர்.

இவர்கள் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 440 குழுக்களாக தனித்தனியாக பிரிந்து சென்று சோதனை நடத்தினார்கள். லாட்ஜுக்கள், மேன்சன்கள் மற்றும் சந்தேகப்படும் இடங்களில் புகுந்து சோதனை நடத்தப்பட்டது. வாகனங்களில் செல்வோரையும் நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது போலீஸ் தேடிய பயங்கர ரவுடிகள் 50 பேர் பிடிபட்டனர். மேலும் 150 பழைய குற்றவாளிகள், 50 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இது தவிர ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 800 பேரும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 100 பேரும், நடுரோட்டில் கலாட்டா செய்த 50 பேரும் சிக்கினார்கள். மொத்தம் 1200 பேர் பிடிபட்டனர். இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ரவுடிகள் மற்றும் பழைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்து போலீஸ் நிலை யங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் போலீசார் உஷாராக இருக்கிறார்களாப என்றும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது வடசென்னை பகுதியில் பாதுகாப்பு பணியில் விழிப்புடன் செயல் படாமல் அசட்டையாக இருந்த 4 பெண் போலீசார் உள்பட 9 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

மகாவீர் ஜெயந்தியையொட்டி இன்று மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டு இருந்தது. மதுக்கடைகளையும் போலீசார் நேற்று இரவு முதல் கண்காணித்து வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறிய தாவது, "சித்திரை திருவிழா விடுமுறை தொடர்ந்து வருவதால் கொள்ளை, வழிப்பறியை தடுக்க இரவு ரோந்து பணி தீவிரப்படுத் தப்பட்டு உள்ளது சந்தேக நபர்களை பிடித்து விசாரித்து அனுப்புகிறோம். சந்தேகப் படும் வகையில் கும்பலாக யாராவது வீடு பிடித்து தங்கி இருக்கிறார்களா என்றும் விசாரித்து பொதுமக்களை உஷார்படுத்தி உள்ளோம். அவ்வாறு யாராவது தங்கி இருந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்''

தாதாக்கள் போல் செயல்படும் உள்ளூர் ரவுடிகள், வெளி மாவட்ட, வெளி மாநில ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகள் என பட்டியல் தயாரித்து தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

(நன்றி-மாலைமலர்)

0 comments:

Free Blog CounterLG