Friday, May 2, 2008

தசாவதார விழா டிரஸ்: சிக்கலில் ஷெராவத்!

தசாவதார விழா டிரஸ்: சிக்கலில் ஷெராவத்!

தசாவதாரம் பட ஆடியோ விழாவுக்கு கவர்ச்சிகரமாக டிரஸ் போட்டு வந்தது மனதைப் புண்படுத்தி விட்டதாக கூறி சென்னையில் மல்லிகா ஷெராவத் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சிதான் இந்த வழக்கைப் போட்டுள்ளது. கடந்த 25ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில், தசாவதாரம் பட ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. முதல்வர் கருணாநிதி, நடிகர்கள் கமல்ஹாசன், ஜாக்கி சான், அமிதாப் பச்சன், மம்முட்டி, நடிகைகள் மல்லிகா ஷெராவத், ஆசின், ஹேமமாலினி, ஜெயப்பிரதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகை மல்லிகா ஷெராவத் படு கவர்ச்சிகரமான டிரஸ்ஸில் வந்திருந்தார். ஜாக்கி சானின் நிழல் போல கூடவே இருந்தார். இதுதான் இப்போது வினையாகி விட்டது.

படு கவர்ச்சிகரமாக டிரஸ் போட்டு வந்தது மனதைப் புண்படுத்துவதாக உள்ளது. எனவே மல்லிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சியின் தென் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கனிராஜன் என்பவர் பெரியமேடு போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மல்லிகா ஷெராவத் போட்டு வந்த ஆடை, தமிழ் கலாச்சாரத்திற்கு பெரும் இழிவை ஏற்படுத்தி விட்டது. மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளேன்.

தேச நலனுக்காகவும், கலாச்சார நெறிமுறைக்காகவும் எங்களது கட்சி பாடுபட்டு வருகிறது. தசாவதாரம் பட விழாவில் ஏராளமான முக்கியப் பிரமுகர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் வந்திருந்தனர்.

முதல்வர் கருணாநிதியும் விழாவில் பங்கேற்றிருந்தார். விழாவுக்கு வந்த பெண்கள் உள்ளிட்டோர் நாகரீகமான உடையில் வந்த நிைலயில் நடிகை மல்லிகா ஷெராவத் மட்டும் குட்டைப் பாவாடையுடன், மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் ஆபாசமான கோலத்தில் வந்திருந்தார்.

முதல்வர் முன்பு கால் மேல் கால் போட்டு அமர்ந்ததோடு, ஆபாசமான சேஷ்டைகளையும் அவர் செய்தார். இதைப் பார்த்து மனம் புண்பட்டு விட்டது. தமிழ்க் கலாச்சாரத்தின் மீது பற்று உள்ளவர்களுக்கு இது மன வேதனையையும், அவமானத்தையும் அளித்தது.

நிகழ்ச்சிக்கு வந்த யாரும் இதை கேட்கவில்லை. எனவே மல்லிகா ஷெராவத் மீதும், அவரை விழாவுக்கு அழைத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று கனிராஜனையும், தசாவதாரம் படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனையும் அழைத்து விசாரிப்பதாக இன்ஸ்பெக்டர் உறுதியளித்துள்ளதாக கனிராஜனின் வக்கீல் தெரிவித்தார்.

ஏற்கனவே சிவாஜி பட விழாவில் கவர்ச்சிகரமான உடையில் வந்ததற்காக நடிகை ஷ்ரியா சர்ச்சையில் சிக்கினார். அவருக்கு எதிராக இந்து மக்கள் கட்சி பிரச்சினை கிளப்பியது. பாமகவும் பிரச்சினை எழுப்பியது. இதையடுத்து ஷ்ரியா மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் தற்போது மல்லிகா ஷெராவத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Free Blog CounterLG