Sunday, May 4, 2008

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய கருணாநிதி முடிவு?

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய கருணாநிதி முடிவு?

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நடைபெறலாம் என பரபரப்பு எழுந்துள்ளது.தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் கருணாநிதி தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.ஐந்து அமைச்சர்களின் செயல்பாடுகளில் முதல்வருக்கு திருப்தி இல்ைல எனவும், எனவே அவர்களுக்கு கல்தா கொடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்குப் பதில் ஐந்து பேர் புதிதாக சேர்க்கப்படக் கூடும்.

மேலும் முக்கிய முடிவாக முதல்வர் கருணாநிதி வசம் உள்ள காவல்துறையை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தரவும் முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. காவல்துறை வழக்கமாக முதல்வர் பதவி வகிப்பவர்கள் கையில்தான் இருந்து வருகிறது. கடந்த 1967ம் ஆண்டுக்குப் பின்னர் இதுதான் வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் அந்த வழக்கத்தை மாற்றி ஸ்டாலினுக்கு காவல்துறையைத் தர முதல்வர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

நீக்கப்படும் அமைச்சர்கள் பட்டியலில் மொய்தீன் கான், என்.கே.கே.பி. ராஜா, சுப.தங்கவேலன், பெரியகருப்பன் ஆகியோர் இருப்பதாக தெரிகிறது. மூத்த அமைச்சர் கோ.சி.மணி உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு மீண்டு மறுபடியும் பணியாற்றி வருகிறார். இருப்பினும் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அமைச்சரவைப் பளுவிலிருந்து அவரை விடுவிக்க முதல்வர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளவர்கள் பட்டியலில் மதுரை மத்திய தொகுதி கவுஸ் பாட்ஷா, நெல்லை கருப்பசாமி பாண்டியன், ராஜ.கண்ணப்பன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.வருகிற 13ம் தேதியுடன் திமுக அமைச்சரவை ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகிறது என்பது நினைவிருக்கலாம்.

இந்த சமயத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்த செய்தி வெளியாகியிருப்பதால் எம்.எல்.ஏக்கள் மத்தியில் அமைச்சர் கனவு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

0 comments:

Free Blog CounterLG